Archives: ஆகஸ்ட் 2017

தேவனது பிரகாசிக்கும் அழகு!

ஆஸ்திரேலியா நாட்டின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள லார்ட் ஹோவே தீவு வெண்மை நிறமணலும் தெளிந்த தண்ணீரும் உள்ள ஒரு சிறிய அழகிய இடம். அத்தீவின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது. இத்தீவில் மிகவும் சாதாரணமாக நீங்கள் கடல் ஆமைகளோடும் மீன்களோடும் பயமின்றி நீந்தலாம். உங்களருகே பெரிய எலும்பையுடைய மூன் இராஸே மீன்கள் தங்களது ஒளிரும் வண்ணங்களை வெளிப்படுத்தி விளம்பரப் பலகைகளை போலத் தோற்றமளிக்கும். அந்தக் கடலில் காயல் பகுதிகளில் பவளப்பாறைகளை நான் கண்டுபிடித்தேன். அங்கே சிவப்பு நிற க்ளவுன் மீன்களையும் மஞ்சள் கட்டங்கள் நிறைந்த வண்ணத்துப்பூச்சி மீன்களையும் என் கைகளால் தொட்டுப் பார்த்தேன். அவ்வாறான இயற்கை மேன்மையினால் உள்ளம் கிளர்ந்தெழுந்து தேவனை ஆராதிக்காமல் இருக்க முடியவில்லை.

எனது இவ்வித உணர்ச்சியின் எழுச்சிக்கு அப்போஸ்தலனாகிய பவுல் காரணம் கூறுகிறார். மிகவும் உன்னதமான படைப்புகள் தேவனுடைய சுபாவத்தை சற்று நமக்கு வெளிப்படுத்துகின்றன (ரோம. 1:20) லார்ட் ஹோவே தீவின் அற்புதங்கள் தேவனுடைய வல்லமையையும் அழகையும் வெளிப்படுத்தின.

தீர்க்கதரிசியாகிய எசேக்கியேல் தேவனை தரிசித்தபோது, நீலரத்தினம் போல விளங்கும் ஒரு சிங்காசனத்தில் மகிமையான வண்ணங்களால் சூழப்பட்ட ஒருவர் அவருக்குக் காணப்பட்டார் (எசே. 1:25-28). அப்போஸ்தலனாகிய யோவான் இது போன்ற ஒரு காட்சியைக் கண்டார். மரகதம் போன்ற வானவில்லால் சூழப்பட்ட விலையேறப் பெற்ற கற்களைப் போல ஜொலிக்கும் தேவனை அவர் கண்டார் (வெளி. 4:2-3). தேவன் தம்மை வெளிப்படுத்தும்போது அவர் நல்லவராகவும் வல்லமை மிக்கவராகவும் மட்டுமல்ல, அழகானவராகவும் வெளிப்படுகிறார். ஒரு சிற்பமானது அதை செய்தவரை பிரதிபலிப்பதைப்போல, சிருஷ்டியானது தேவனின் இந்த அழகை எடுத்துரைக்கிறது.      

தேவனுக்குப் பதிலாக இயற்கையை பல இடங்களில் மனிதர் தொழுதுகொள்ளுகிறார்கள் (ரோம. 1:25). இது மிகவும் துக்ககரமானது! பூமியின் தெளிவான தண்ணீர்களும் மினுமினுக்கும் உயிரினங்களும் அவற்றுக்குப் பின்னாலுள்ள கடவுளை நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. இந்த உலகிலுள்ள எல்லாவற்றையும்விட அதிக வல்லமையுள்ளவர், அதிக அழகுள்ளவர் அவர் மட்டுமே!

சுத்தமாக்கப்பட்டோம்!

பாத்திரம் கழுவும் மெஷினை நான் திறந்தபோது என்ன நடந்ததென்றே தெரியவில்லை. பளபளக்கும் பாத்திரங்களைக் காண்பதற்குப் பதிலாக, சாக்பீஸ் பொடி போன்ற ஒன்றால் மூடப்பட்ட பாத்திரங்களையும் கோப்பைகளையும் நான் அங்கிருந்து அகற்றினேன். எங்கள் பகுதியிலுள்ள கடின நீர் இப்படி கேடு விளைவித்தோ அல்லது அந்த இயந்திரம் பழுதாகி விட்டதா என திகைத்தேன்.

அந்தக் கெட்டுப்போன பாத்திரம் கழுவும் இயந்திரத்தைப் போலல்லாது, தேவன் நமது அனைத்து அசுத்தங்களையும் சுத்திகரிக்கிறார். எசேக்கியேல் தேவனுடைய அன்பு மற்றும் மன்னிக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டபோது, தேவன் தமது மக்களைத் திரும்பவும் தம்மிடம் வரவழைப்பதை எசேக்கியேலின் புத்தகத்தில் காண்கிறோம். தங்களது ஐக்கியத்தை மற்ற தேவர்களோடும் பிற நாடுகளோடும் பிரகடனப்படுத்திய இஸ்ரவேலர் இப்படி தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தனர். என்றபோதிலும், அவர்களைத் தம்மிடம் வரவழைப்பதில் தேவன் கிருபையாய் இருந்தார். அவர், “உங்களுடைய எல்லா அசுத்தங்களையும்… எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி, உங்களைச் சுத்தமாக்குவேன்” (36:25) என வாக்குத்தத்தம் செய்தார். அவர்கள் உள்ளத்திலே அவர் தமது ஆவியானவரை வைத்தார் (வச. 27). அவர்களைப் பஞ்ச நாட்டிற்கல்ல, செழிப்பான தேசத்துக்கு அவர் கொண்டுவருவார் (வச. 30).

எசேக்கியேலின் காலத்தைப் போலவே, நாம் வழி தப்பிப் போயிருப்போமானால் நம்மைத் திரும்பவும் தம்மண்டைக்கு அவர் வரவேற்கிறார். அவரது வழிகளுக்கும் அவரது சித்தத்திற்கும் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நமது பாவங்களிலிருந்து நம்மை அவர் கழுவி நம்மை மறுரூபப்படுத்துகிறார். நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் மூலம், ஒவ்வொரு நாளும் அவரைப் பின்பற்ற அவர் நமக்கு உதவி செய்கிறார்.

நிரம்பி வழியும் கனி!

இளவேனிற்காலம் மற்றும் கோடையில் எங்களது அண்டைவீட்டுக்காரரின் பின்புறத் தோட்டத்தில் பழங்கள் வளர்வதை நான் ஆர்வத்தோடு பாப்பதுண்டு. அங்கு பயிரிடப்பட்ட திராட்சையின் கொடிகள் எங்களிருவரது வீடுகளுக்கிடையிலான பொது வேலியில் படர்ந்து, திராட்சக்குலைகள் அதில் தொங்கும். நாங்கள் பறிக்கின்ற உயரத்தில், பெரிய செழுமையான பிளம் பழங்களும், ஆரஞ்சுகளும் கிளைகளில் கொத்தாக தொங்கும்.

நாங்கள் நிலத்தைக் கொத்தி, விதைத்து, களை எடுத்து தண்ணீர் பாய்ச்சாவிட்டாலும் எங்களது அண்டை வீட்டுக்காரர் விளைச்சலில் ஒரு பங்கை எங்கலோடு பகிர்ந்து கொள்ளுகின்றார். பயிரை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் எடுத்துக் கொண்டு அறுவடையில் ஒரு பாகத்தில் நாங்கள் களிக்க எங்களை அனுமதிக்கின்றனர்.

எங்களது வேலிக்கு அந்தப் புறத்திலுள்ள மரங்கள் மற்றும் செடிகளின் விளைச்சலானது, தேவன் என் வாழ்க்கையில் வைக்கும் இன்னொரு அறுவடையை நினைவுபடுத்துகிறது. அது எனக்கும் என் வாழ்க்கையில் தேவன் கொண்டுவரும் மக்களுக்கும் பயனளிக்கிறது. அது ஆவியின் கனி மற்றும் அறுவடை!

பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் வாழ்கின்ற வாழ்வில் பயன்களை சுதந்தரிக்கும்படி கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். நமது இதயங்களில் தேவனுடைய உண்மையின் விதைகள் செழிப்பாக வளருகையில், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் போன்றவற்றை வெளிப்படுவதில் நமது திராணியைப் பெருக்கும் ஆற்றலை ஆவியானவர் உருவாக்குகிறார் (கலா. 5:22-23).

நமது வாழ்வை இயேசுவானவருக்கு அர்ப்பணிக்கும்போது, இனி ஒருபோதும் நமது சுயம் சார்ந்த மாம்ச இச்சைகளால் நாம் கட்டுப்படுத்தப்படுவதில்லை (வச. 24). காலப்போக்கில் பரிசுத்த ஆவியானவர் நமது சிந்தனையையும், நமது நடவடிக்கைகளையும் நமது செயல்களையும் மாற்றுவார். கிறிஸ்துவில் நாம் வளர்ந்து முதிர்ச்சியடையும்போது, அவரது தாராளமான விளைச்சலின் பலனை நமது அண்டை அயலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளும் சந்தோஷத்தை நாம் பெற்றுக்கொள்ளுவோம்.

கவனத்தில் கொள்தல்!

ஜான் நியூட்டன் இவ்வாறு எழுதினார், “நான் வீட்டிற்கு போகும் வழியில் 50 காசை தொலைத்துவிட்ட ஒரு பிள்ளையை சந்திக்கிறேன். இன்னொரு 50 காசு நாணயத்தை அப்பிள்ளையிடம் கொடுப்பதன் மூலம் அதன் கண்ணீரை நான் துடைக்கக் கூடுமானால் நான் ஒரு நன்மை செய்துவிட்டதாக உணருகிறேன். பெரிய காரியங்களைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆயினும் இது போன்ற சிறிய காரியங்களை நான் அசட்டை செய்யக்கூடாது!”

இன்றைய உலகில் ஆறுதலைத் தேடி அலைவோர் எங்கும் உள்ளனர்: ஒரு பலசரக்குக் கடையின் காசாளர் தனது குடும்பப் பொருளாதார நெருக்கடியினிமித்தம் இரண்டாம் வேலையைச் செய்ய வேண்டியுள்ளது; சொந்த வீட்டிற்குத் திரும்ப வாஞ்சிக்கும் ஒரு அகதி; வாழ்வில் நம்பிக்கையை முற்றிலும் இழந்து கவலைப்படும் ஒரு கணவனற்ற தாய்; தான் பயனற்றவனாய் வாழ்கிறேனா என அஞ்சிடும் ஒரு தனிமையான முதியவர்.

ஆனால், நாம் செய்ய வேண்டியது என்ன? சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்” என்று தாவீது எழுதினார் (சங். 41:1) நாம் வாழ்வில் சந்திக்கின்றவர்களின் வறுமையை ஒழிக்க நம்மால் கூடாததென்றாலும், நாம் அவர்களைக் குறித்து கரிசனை கொள்ளலாம். “கவனம் செலுத்துங்கல்” நாம் மனிதர் மேல் அக்கறை கொள்வதை அவர்கள் அறிந்திடச் செய்யலாம். தேவையிலிருப்போரை சமாளிப்பது கடினமென்றாலும் அவர்களைப் பட்சமாகவும் மரியாதையாகவும் நாம் நடத்தலாம். அவர்களது வாழ்வின் கதைகளை ஆர்வத்தோடு கேட்கலாம். அவர்களுக்காக, அவர்களோடு சேர்ந்து நாம் ஜெபிக்கலாம். அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் மேலான உதவியானது, குணமாக்க வல்லது.

இயேசுவானவரின் அந்தப் புராதனமான முரண்பாடாய்த் தோன்றும் வார்த்தைகளை நினைவு கூருங்கள்: “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” (அப். 20:35) பிறரது தேவைகளைக் கவனத்தில் கொள்ளுவது பலனளிக்கவல்லது, ஏனென்றால் மற்றவர்களுக்காக நாம் செயல்படும்போது அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஏழைகளின் மேல் சிந்தை கொள்ளுவோமாக!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உங்கள் விசுவாசத்தை பகிருங்கள்

1701 ஆம் ஆண்டில், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, உலகம் முழுவதும் மிஷனரிகளை அனுப்ப நற்செய்தி பிரச்சார சங்கத்தை நிறுவியது. அவர்கள் தேர்ந்தெடுத்த இலட்சிய வாா்த்தைகளாக ட்ரான்சியன்ஸ் அடியுவா நோஸ், லத்தீன் மொழியில் “வந்து எங்களுக்கு உதவுங்கள்!” இயேசுவைப் பின்பற்றுபவர்கள் அவருடைய அன்பு மற்றும் மன்னிப்பின் செய்தியை மிகவும் அவசியமான ஒரு உலகத்திற்கு எடுத்துச் செல்வதால், முதல் நூற்றாண்டிலிருந்து நற்செய்தி ஸ்தானாதிபதிகளின் அழைப்பு இதுவே.

“வந்து எங்களுக்கு உதவுங்கள்” என்ற சொற்றொடர், அப்போஸ்தலர் 16 இல் விவரிக்கப்பட்டுள்ள “மக்கெதோனியா அழைப்பிலிருந்து” வருகிறது. பவுலும் அவரது குழுவும் ஆசியா மைனரின் மேற்குக் கடற்கரையில் உள்ள துரோவாவுக்கு வந்தார்கள்(இன்றைய துருக்கி, வ.8). அங்கே, பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தானொருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. (வ.9) அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, பவுலும் அவர் குழுவினரும் உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போனார்கள் (வ. 10)அழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொண்டனர்.

எல்லோரும் கடல்களைக் கடக்க அழைக்கப்படுவதில்லை, ஆனால் நமது ஜெபங்கள் மற்றும் நிதிகளால் அதை செய்பவர்களை நாம் ஆதரிக்கலாம். நாம் அனைவரும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் நமது அறையிலோ, தெருவிலோ அல்லது சமூகத்திலோ யாரிடமாவது சொல்ல முடியும். நமது நல்ல தேவன் நாம் கடந்துபோய், எல்லாவற்றிலும் மேலான உதவியாகிய இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் மன்னிப்பின் வாய்ப்பை மக்களுக்கு வழங்கசெய்ய ஜெபிப்போம்.

அன்புக்காக தாகம்

சிறுவயதில் கோடை விடுமுறையில் வேலூரில் உள்ள கோடைக்கால வேதாகம பள்ளிக்கு (விபிஎஸ்) சென்று வந்தேன். வெப்பநிலை சுமார் 45 டிகிரி சென்டிகிரேட் ஆக இருக்கும். வானத்தில் மேகமோ, மரங்களில் இலையோ, தென்றல் வீசும் அறிகுறியோ இருக்காது. கொதிக்கும் வெயிலுக்கு இதமாக எங்களுக்கு இருந்த ஒரே நிவாரணம், எங்கள் புட்டிகளில் உள்ள தண்ணீரும் தன்னார்வலர்கள் வாளிகளில் கொண்டு வந்த பழச்சாறுகள் மட்டுமே. பழச்சாறு நிறைந்த ஒரு குவளை படியளப்பிற்கு நாங்கள் எங்கள் கோப்பைகளுடன் வரிசையில் நிற்போம். எவ்வளவு மெதுவாகக் குடிப்போம்! ஆயினும்கூட, எங்கள் கோப்பைகள் வறண்டு போகும், மேலும் நாங்கள் அதிகம் பெறத் தவிப்போம், அரிதாகவே இரண்டாவது முறையும் கிடைக்கும்.

வறண்டு போகத் தக்கதான கோடையில் திரவங்களுக்கான நமது தாகத்தைப் போலவே, பாழான அன்பற்ற உலகில் நாம் அனைவரும் அன்பிற்காகத் தாகம் கொள்கிறோம். நாம் பல்வேறு இடங்களில் அன்பைத் தேடுகிறோம், மேலும் அது பெரும்பாலும் அளந்து போடும்படிக்கு வறண்டு கிடக்கிறது அல்லது நிபந்தனைக்குட்பட்டு விலைகொடுத்து வாங்க வேண்டும் என்பதாகக் காண்கிறோம். ஆனால் ஒருபோதும் வறண்டு போகாத "ஜீவத்தண்ணீரின்" மூல ஆதாரம் இருப்பதாக வேதாகம நமக்குக் கற்பிக்கிறது (யோவான் 4:13-14). ஜீவத் தண்ணீர் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது (யோவான் 7:39). அப்போஸ்தலனாகிய பவுல் பரிசுத்த ஆவியின் மூலம் "தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிற(தாக)" (ரோமர் 5:5) நமக்குக் கூறுகிறார். இது அளந்து போடப்படுவதல்ல அல்லது நமது தகுதிக்கு தக்கதாகவும் அல்ல. மாறாக, அது எல்லையற்றது மற்றும் அளவிட முடியாதது.

நாம் அவருக்கு விரோதமாக முரட்டாட்டம் செய்தபோதும், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க அனுப்பியதன் மூலம் நம்மீதான தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார் (வ.8). இயேசுவின் பலியின் காரணமாக, அவரிடமிருந்து பிரிந்திருந்த தனிமையிலிருந்து நாம் இரட்சிக்கப்படுகிறோம், தேவனுடன் நாம் ஒப்புரவாக்கப்படுகிறோம். அவர் அவருடைய அன்பை நமக்குள் ஊற்ற, அது அன்பின் ஊற்றாக மாறும் (வ.10) . நீங்கள் அன்பிற்காகத் தாகமாக இருந்தால், தேவனிடம் செல்லுங்கள். அவரே அன்பு.

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.